டாக்டர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த சென்னைப் பெண்... ரூ. 1,80,00,000 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவ
டெல்லி: மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த சென்னை பெண்ணுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரது மனைவி லட்சுமி. இவருக்கு கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்ததால் 25 நாட்கள் அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சிகிச்சையினால் குழந்தை விழித்திரை பாதிக்கப்படும் ஆபத்து இருந்தும், அதனை தடுப்பதற்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சில மாதங்களில் அக்குழந்தையின் விழித்திரை பாதிப்படைந்து, முற்றிலும் பார்வை பறி போனது.
இதையடுத்து மருத்துவர்கள் அலட்சியத்தால் பார்வையை இழந்த தமது பெண் குழந்தைக்கு இழப்பீடு கோரி தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நுகர்வோர் நீதிமன்றம் தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இந்த இழப்பீடு குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்க கோரி, கிருஷ்ணகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று தீர்பளித்தது. அதில், தமிழக அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், பார்வை இழந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 38 லட்சம் , மற்றும் மருத்துவ செலவுக்காக ரூ.43 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்க இருக்கும் இந்த இழப்பீட்டு தொகை இதுவரை நாட்டில் வழங்கப்பட்ட அதிகப்பட்ச இழப்பீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.