என்.ஜி.ஓ. க்களின் வரவு செலவு கணக்கு... தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததா, இல்லையா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழகம் மற்றும் தெலுங்கனாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்னா ஹசாரே நடத்தும் சுவாரஜ் அறக்கட்டளையின் பணத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நாட்டில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகள் குறித்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகளை பெற்று தாக்கல் செய்யும்படி சிபிஐ கேட்டிருந்தது. இதற்கு பல மாநிலங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல் தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அகர்வால் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று நடந்தது. அப்போது சிபிஐ தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
20 மாநிலங்களில்..
20 மாநிலங்களில் உள்ள 22 லட்சத்து 39 ஆயிரத்து 971 தொண்டு நிறுவனங்களில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 428 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே தங்களின் மாநில அரசுகளிடம் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் உள்ள 5 ஆயிரத்து 684 தொண்டு நிறுவனங்களில், 50 நிறுவனங்கள் மட்டுமே வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளன.
தகவல் தந்தவை..
அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஒரு பகுதி தகவல்களை மட்டுமே அனுப்பியுள்ளன. அந்த மாநிலங்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில்..
அஸ்ஸாமில் உள்ள 97, 437 தொண்டு நிறுவனங்களில் ஒன்று கூட தங்களின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. கோவா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.
தமிழ்நாடு- தெலுங்கானா..
தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகளை பெற்றதா இல்லையா என தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அரசின் சலுகை கூடாது
அப்போது வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பத்வாலியா, கடந்த 3 ஆண்டுகளின் வரவு, செலவு கணக்குகளை, தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், அவைகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கக்கூடாது என்றார். அனைத்து விவரங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மேலும், சிபிஐ கேட்ட விவரங்களை அளிக்காதது ஏன், தொண்டு நிறுவனங்கள் வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததா, இல்லையா என்பது குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு, தெலுங்கானா அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.