தாஜ்மஹால் உலக அதிசயம்..அங்கு தொழுகை நடத்த கூடாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு
தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்ரா பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாஜ்மகாலில் உள்ள பள்ளவாசலில் ஆக்ராவில் குடியிருப்பவர்கள் அல்லாத ஏனைய மக்களும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தாஜ்மஹால் மஸ்ஜித் மேலாண்மைக் குழுவின் தலைவர் சையத் இப்ராஹிம் ஹுசைன் சைதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அதிசயங்களில் ஒன்று
மனுவை விசாரித்த நீதிபதிகள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இடையூறை ஏற்படுத்தும்
மேலும், இங்கு நாடு முழுவதும் இருந்து பலரும் வந்து செல்கின்றனர். இதனால் தொழுகை நடத்துவது பெரும் இடையூறை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மற்ற மசூதிகளுக்கு..
தொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளது என்றும் தொழுகை நடத்த விரும்புபவர்கள் மற்ற மசூதிக்கு சென்று தொழுகை நடத்தலாமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முக்கிய சுற்றுலாத் தலம்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தாஜ்மகால் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.