கர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? உச்சநீதிமன்ற கேள்வியால் பதறிய காங்கிரஸ்!
சபாநாயகர் நியமனம் சரியில்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: சபாநாயகர் நியமனம் சரியில்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் பதறிய காங்கிரஸ் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார்.
ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
போப்பையா நியமனம்
நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்க என்பதால் மூத்த உறுப்பினரான கேஜி போப்பையாவை சபாநாயகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
பதவி பிரமாணம்
இதையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் பாஜ கட்சியின் மூத்த உறுப்பினரும், பேரவை முன்னாள் சபாநாயகருமான கேஜி போப்பையாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நேற்றிரவு அவசர மனு
இன்று காலையில் புதிய எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் போப்பையா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இவர் முதல்வர் எடியூரப்பாவுக்கு வேண்டியவர். அதனால் இவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.வுக்கு சாதகமாக செயல்படுவார் என்பதால், இவரது நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு அவசர மனு தாக்கல் செய்தது.
போப்பையா நடத்தக்கூடாது
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. போப்பையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மால் மலானி ஆகியோர் ஆஜராகினர். நம்பிக்கை வாக்கெடுப்பை போப்பையா நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அனுபவம் இல்லாதவர்
காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். மரபுபடி மூத்த எம்.எல்.ஏ.வைத்தான் இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்றார். சபாநாயகர் போபையா போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் கபில் சிபல் கூறினார்.
ஒத்திவைக்க சம்மதமா?
இதனைக்கேட்ட நீதிபதிகள் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்க போப்பையாவை சபாநாயகராக நியமித்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் சபாநாயகர் நியமனம் சரியில்லை எனக்கூறப்படும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உச்சநீதிமன்றம் மறுப்பு
ஆனால் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையாவை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நேரலை செய்யலாம்
மேலும் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும், அனைத்து ஊடகங்களும் வாக்கெடுப்பை நேரலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.