ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்தி படேல் மீதான தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தேசத் துரோக வழக்கில் ஹர்திக் படேல் உள்ளிட்ட 5 பேரை சூரத் போலீசார் கடந்த 21 ம் தேதி கைது செய்து சபர்மதி மத்திய சிறையில் அடைத்தனர்.
தன் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஹர்திக் பட்டேல் மனு செய்து உள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கெய்தர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஹர்திக் பட்டேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சூரத் போலீஸார் முழுமையாக விசாரித்து முடித்த பின்னரே இதுபற்றி எந்த முடிவும் எடுக்க முடியும் என்று கூறி ஹர்திக் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.
இந்த வழக்கில் 45 நாட்களுக்குள் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சூரத் போலீஸாரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அனுமதி இல்லாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தனர்.