ஓரினச்சேர்க்கை குற்றமே: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஓரினச்சேர்க்கை என்பது நமது பண்பாட்டிற்கு எதிரானது என்றும், அது சட்டவிரோதம் என்றும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை மத்திய அரசு ஏற்கவில்லை. இரு தனி மனிதர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உறவை தடுக்க கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது. மத்திய அரசின் மனுவுடன் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் கோரினர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறினர்.
மேலும் மத்திய அரசு மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இதனால் இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சட்டப்படி தண்டனையை சந்திக்க நேரிடும்.