லோதா கமிட்டி பரிந்துரையில் தவறு இல்லை.. பிசிசிஐ மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமனறம்
லோதா குழு பரிந்துரையை மறு ஆய்வு செய்யக்கோரி பி.சி.சி.ஐ. சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லி: லோதா குழு பரிந்துரையை அமல்படுத்துமாறு பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பி.சி.சி.ஐ. சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது.
அதில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது, கிரிக்கெட் அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை அனுமதிக்கக்கூடாது, ஒருவர் மூன்று முறைக்கு மேல் நிர்வாகியாக தொடரக்கூடாது, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் வாக்களிக்க ஒரு மாநிலத்துக்கு ஒரு சங்கத்துக்கு மட்டுமே வாக்குரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அதிரடி பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பிசிசிஐ உத்தரவிட்டது. ஆனால் பிசிசிஐ அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம் இழுத்தடிப்பு செய்து வந்தது.
இந்த நிலையில், லோதா குழு உத்தரவை அமல்படுத்துமாறு கடந்த ஜூலை 18 ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிசிசிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்ற வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு வந்துள்ளது