நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் இருக்கலாமா.. உத்தரவை தளர்த்திய உச்சநீதிமன்றம்
நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
டெல்லி: சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலைக்கு இருபுறமும் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந்தேதிக்குள், அதாவது இன்றுக்குள், மூடுமாறு கடந்த டிசம்பர் 15ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனலா், இந்த உத்தரவில் திருத்தங்கள் செய்ய தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மதுக்கடை உரிமையாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. வருமானத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட முடியாது என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அவ்வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முந்தைய உத்தரவில் தளர்வு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
20 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டர் தொலைவை 220 மீட்டராக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. சாலையிலிருந்து பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது என விதிமுறை வகுத்துள்ளது.
விபத்துகளை குறைக்கும் வகையில், மக்கள் நலனுக்காகவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது.