ஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா? முடிவை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்துள்ள உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவு 377 இக்கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் சட்டம் என்றும் பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பான ஒரு வழக்கில் சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும், ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதமுடியாது என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் 'சட்டப் பிரிவு 377 செல்லும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றம் இந்த சட்டப்பிரிவை நீக்கிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து, சட்டப் பிரிவு 377ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்தான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, இந்த வழக்கில், நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் என தெரிவித்தார்.
இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஓரினச் சேர்க்கை குற்றச்செயல் இல்லை என தீர்ப்பளித்தால் எச்ஐவி நோய் பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.
நீதிபதி நாரிமன் கூறுகையில், ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் என்ற சட்டப் பிரிவு தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என நாங்கள் கருதினால், அந்த சட்டத்தை செல்லாது என உச்ச நீதிமன்றமே அறிவிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே நாடாளுமன்றத்தின் முடிவிற்கு உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அனுப்பாது என்பது உறுதியாகிவிட்டது. ஓரினச் சேர்க்கை சரி அல்லது தவறு என்று மட்டுமே தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.