வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு
வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பியை தமிழக போலீசார் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சசிகலா புஷ்பாவிற்கு எதிராக ஆஜராகும் வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதே வழக்கில் சசிகலா புஷ்பாவிற்கு முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடியை சேர்ந்த 2 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளை பெண் வக்கீல் சுகந்தி ஆஜரானார்.
அவர் கொச்சிக்கு சென்றிருந்தபோது திசையன்விளையில் உள்ள அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக, சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தங்களையும் சேர்த்து கைது செய்ய முயற்சி நடந்து வருவதால் முன்ஜாமீன் வழங்கும்படி சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல கைதான ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகிய 3 பேரும் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதி, சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளோடு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
மேலும், வக்கீல் வீடு தாக்கப்படுவதற்கு முன்பு தாக்குதல் நடத்திய நபர்கள் சசிகலா புஷ்பாவுடன் பேசியதற்கான ஆடியோ ஆதாரங்களை அரசு சமர்ப்பித்து உள்ளது. மேலும் வக்கீல் வீட்டை தாக்குவதற்காக சசிகலா புஷ்பாவிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றதாக ஹரி போலீசில் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு வக்கீல் கூறியது போல சசிகலா புஷ்பாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், பிரதீப்ராஜா ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்கள் திசையன்விளை போலீசில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி உத்தரவிட்டார் நீதிபதி வைத்தியநாதன்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது