காவிரியில் கழிவு நீர்: தமிழக மனுவிற்கு பதிலளிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தமிழகம் தொடர்ந்த மனுவிற்கு, பதிலளிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நதி, அம்மாநிலத்தில் பல கி.மீ தூரம் ஓடி வந்து, தமிழகம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இந்நிலையில், காவிரியில் பல்வேறு வகையான கழிவுகள் கலக்கப்படும் நிலையில், அதுபற்றி கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்தது. "காவிரியில் கலக்கும் கழிவுகளை சுத்திகரிக்க கர்நாடக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது" என்று பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பேச்சு அந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இன்னும் 8 வாரத்திற்குள் தமிழகத்தின் மனுவிற்கு பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.