அவதூறு வழக்கு விவகாரம்: ஜெ.விடம் விஜயகாந்த் வழக்கறிஞரே நோட்டீஸ் கொடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: அவதூறு வழக்கில் பதிலளிக்க பிறப்பித்த நோட்டீஸை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வழக்கறிஞரே முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு ஜெயலலிதா இன்னும் ஏன் பதில் அளிக்கவில்லை என கேள்வி எழப்பினர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது 213 அவதூறு வழக்குகள் தொடர்ந்தது ஏன் என்பதற்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு, ஜெயலலிதாவுக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நோட்டீஸை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரே ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் நீங்கள் பொது வாழ்வில் இருக்கும் ஒருநபர். அதனால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது. தமிழகத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முடியாது. அவதூறு வழக்கு சட்டம், தமிழகத்தில் தான் அதிக அளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என நீதிபதிகள் கண்டனமும் தெரிவித்தனர்.