அப்பாடா.. போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பிய பிரியா வாரியர்
Recommended Video
டெல்லி: நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருபவர் பிரியா வாரியர். இவர் நடித்துள்ள "ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. 'மாணிக்ய மலராய பூவி' என்ற அந்தப் பாடலில், பிரியா பிரகாஷ் பள்ளி மாணவி வேடத்தில் நடித்திருந்தார்.
புருவ புயல்
அதில் புருவத்தை வளைத்து இவர் செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. இந்நிலையில், அவருக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னாமா காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி, ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசில் புகார்
பிரியா வாரியர் நடித்த அந்தப் பாடலின் வரிகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்காவின் ராணிபோல வாழ்வார் என்ற அர்த்தத்தில் பாடல் வரிகள் இருப்பதே குற்றச்சாட்டுக்கு காரணம். இதுதவிர, அந்தப் பாடலை யூடியூப்பில் இருந்து நீக்கக் கோரி, பிரியா பிரகாஷுக்கு எதிராக மும்பையில் குற்றவியல் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் கொண்டாட்டம்
இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நடிகை பிரியா பிரகாஷ் நேற்று மனு தாக்கல் செய்தார். "ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் வரிகளை கேரளாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் பாடி, கொண்டாடி வருகின்றனர். எந்தவிதக் காரணமுமின்றி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமையை முடக்கும் செயல். இதுபோன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது
நிம்மதி
இதை அவசர வழக்காக இன்று எடுத்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப்பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ கூடாது என தடை விதித்துள்ளது. தெலுங்கானா, மகாராஷ்டிரா அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.