நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் - சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டனி அரசை உலுக்கிய ஊழல்களில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலும் ஒன்று. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிபிஐ வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் அவ்வப்போது சிபிஐ விசாரணை அறிக்கையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும், அரசு தரப்பில் வாதாடுவதற்காக தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்து அவர்களின் பெயர்களை தெரிவிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.