திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி
சூரத்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்காகும் செலவுடன் சிறிது பணத்தை சேர்த்து ரூ. 11 லட்சத்தை வழங்க சூரத் தம்பதி முன்வந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள் ஹஸ்முக்பாய் சேத் மற்றும் அஜய் சங்வி. வைர வியாபாரிகள். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அத்துடன் 15-ஆம் தேதியான நேற்று திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி திருமண வரவேற்பை ரத்து செய்ததோடு அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்துவிட்டனர். மேலும் சமையல், அலங்காரம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 5 லட்சம் பேசப்பட்ட நிலையில் மணமக்கள் வீட்டார் மேலும் ரூ. 6 லட்சத்தை சேர்ந்து ரூ. 11 லட்சமாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்தனர்.
இதற்கு முழு ஆதரவு அளித்த கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.