விருந்தினர்களுக்கு வெறும் டீ, தண்ணீர் மட்டும்.. 500 ரூபாய் செலவில் மட்டுமே நடைபெற்ற திருமணம் !
ரூபாய் நோட்டுக்கு தடையால் விருந்தினருக்கு வெறும் டீ மட்டும் கொடுத்து 500 ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்றது.
சூரத்: பழைய 500 மற்றும் 1, 000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால் வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து குஜராத்தில் ஒரு தம்பதியினர் திருமணம் நடத்தியுள்ளதாக கூறுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நவம்பர் 8 ம் தேதிக்கு பின்னர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்த பெரும்பாலோனோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து திருமணச் செலவுகளுக்காக ரூ 2.5 லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என கடந்த 17ம் தேதி மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. இருப்பினும் இந்த தொகையில் திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் வெறும் 500 ரூபாய் செலவில் மிகச்சிக்கனமாக ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களுக்கு டீ மற்றும் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.
இதுகுறித்து மணமகள் கூறும் போது," பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடங்கத்தில் எங்களை கவலையில் ஆழ்த்தியது . பின்னர் நாங்கள் பிரம்மாண்டத்தை தவிர்த்து எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு தண்ணீர் மற்றும் டீ வழங்கினோம்" என்று அவர் கூறினார். மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்ட திருமணம் பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து சில்லறை தட்டுப்பாடு காரணமான தற்போது வெறும் 500 ரூபாயில் நடந்து முடிந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்தியது மக்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.