பெண் மருத்துவரை மிரட்டிய குடியிருப்புவாசிகள்.. பிரதமருக்கு போட்ட அந்த ட்வீட்.. மோடி எடுத்த நடவடிக்கை
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியரை அவர் தங்கியிருக்கும் குடியிருப்புவாசிகள் அவர் பணிக்காக வெளியே செல்லக் கூடாது என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. உயிரிழப்புகளோ 11-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவை பிரதமர் பிறப்பித்தார்.
எனினும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், தூய்மை பணியாளர்கள், போலீஸார் என அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என அறிவித்தார்.
குடும்பத்தினர்
அது போல் அவசர காலமான இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறி அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டிருந்தார்.
குடியிருப்புவாசிகள்
இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் சஞ்சிபானி பானிகிரஹி. அவர் மருத்துவமனையில் உளவியல் துறை நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் பணிக்கு செல்லக் கூடாது என குடியிருப்புவாசிகள் மிரட்டியதாக புகார் அளித்தார். இவர் கூறுகையில், நான் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் அபார்ட்மென்டை சேர்ந்த 8 முதல் 10 பேர் வரை வீட்டு பிரதான வாயில் அருகே உட்கார்ந்திருந்தனர்.
பெண் மருத்துவர்
நான் வீட்டை அடைந்ததும் அவர்கள் என்னிடம் வந்து "வீட்டை விட்டு வெளியே நீங்கள் போவதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது சரி அல்ல. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என மிரட்டியுள்ளனர். இதையடுத்து பிரதமருக்கு அந்த பெண் மருத்துவர் ட்வீட் போட்டுள்ளார்.
மருத்துவர்
இந்த ட்வீட் எனது ஏராளமான மருத்துவ நண்பர்களுக்கு உதவியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அபார்ட்மென்ட்டில் எனது கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறேன். அவசர நேரங்களில் இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு நான் எத்தனையோ முறை உதவியுள்ளேன். எங்கள் அபார்ட்மென்டில் உள்ள அனைவருக்கும் நான் ஒரு மருத்துவர் என்பது தெரியும்.
அபார்ட்மென்ட்
இதையடுத்து திங்கள்கிழமை காலை முதல் குடியிருப்புவாசிகளின் நடத்தை மாறியுள்ளது. எனவே எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவர்களுக்கு கரகோஷம் செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ ஹர்ஷ் சங்வி உதவியுள்ளார். அவர் கூறுகையில் நான் அந்த அபார்ட்மென்ட் மக்களை சந்தித்து பேசினேன்.
காவல்துறை
அப்போது அந்த பெண் மருத்துவர் மனிதநேயத்துடன் தனது உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார். எனவே அவரிடம் அப்படி நடந்து கொள்ளாதீர்கள். இதே நிலை மீண்டும் தொடர்ந்தால் காவல்துறையை வரவழைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தேன் என்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மருத்துவ பணியாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய சொன்னால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.