சூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்
சூரத்தில் கடந்த வாரம் 86 காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமி கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
சூரத்: சூரத்தில் கடந்த வாரம் 86 காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குஜராத் மாநிலம், சூரத்தில் பேஸ்தான் என்ற பகுதியில் கடந்த வாரம் 9 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிரிக்கெட் மைதானம் அருகே இதுபோன்ற ஒரு உடல் கிடப்பதாக அவ்வழியே நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
அந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவரது உடலில் மரத்தினாலான கட்டையால் ஏற்பட்ட 86 காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் பிறப்புறுப்பிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.
விவரங்கள்
இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட 1 முதல் 7 நாட்களுக்குள் ஏற்பட்டவை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து சிறுமியின் விவரங்களை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ம.பி.யை சேர்ந்தவர்
விசாரணையில் சூரத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியே வந்தன. சிறுமியின் தந்தையை இழந்துவிட்டு தாயுடன் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் எல்லை பகுதியான கங்காபூரில் வசித்து வந்தது தெரியவந்தது.
35 ஆயிரம் பணம்
குழந்தையுடன் தாய் வருமானத்துக்கு அவதிப்படுவதை அறிந்த ஒரு நபர் அந்த தாயிடம் வந்து ஒப்பந்த அடிப்படையில் சூரத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று கூறி அந்த பெண்ணிடம் ரூ.35 ஆயிரத்தை வழங்கினார். இதை நம்பிய அவரும் குழந்தையுடன் அந்த ஆசாமியின் இடத்துக்கு சென்றார்.
சிறுமியை கொன்றுவிடுவதாக மிரட்டல்
அப்போது ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த ஆசாமி. ஒப்பந்த பணிக்கு என்று அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடுமை செய்தது குறித்து அந்த பெண் சண்டையிட்டால் குழந்தையை கொன்றுவிடுவதாக அந்த காமகன் மிரட்டியுள்ளார்.
தாய் கெஞ்சியும் கேட்கவில்லை
தாயின் வாழ்க்கையை சீரழித்தது மட்டுமில்லாமல் அவரது மகள் 9 வயது சிறுமியையும் அவரது உறவினருடன் சேர்ந்து பலாத்காரம் செய்தார். "என் மகளையாவது விட்டு விடு, நீங்கள் கொடுத்த பணத்தை கொடுத்துவிடுகிறேன்" என்று கெஞ்சியும் அந்த சிறுமியை விடவில்லை.
சிறுமி பலாத்காரம்
4 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் 86 முறை மரக்கட்டையால் அந்த சிறுமியை அடித்து கொன்றுவிட்டு உடலை கிரிக்கெட் மைதானத்தில் வீசியுள்ளனர். இதுதான் கடந்த 15-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
மரபணு சோதனைக்கு உடல்
இந்நிலையில் அந்த சிறுமியின் தாயை காணவில்லை. சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கடந்த 12-ஆம் தேதி ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது சிறுமியின் தாயா என்பதை அறிந்து கொள்ள மரபணு சோதனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.