புனேவில் தங்க மாஸ்க்ன்னா...சூரத்தில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்குகள் விற்பனை!!
சூரத்: புனேவில் ஒருவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து இருந்தார். தற்போது, குஜராத் மாநிலம் சூரத்தில் வைரக் கற்கள் பதித்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான மாஸ்க்குகளை நகைக்கடை ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் நிரந்தரமாக இருக்கும் என்று உலக சுகாதார மையமும், சில அறிவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். அதாவது, இதுவும் புளூ காய்ச்சல் போன்று மாறிவிடும் என்று கூறி இருந்தனர். இந்த நிலையில் மாஸ்க்குகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புனேவில் ஒருவர் தங்க மாஸ்க் அணிந்து இருந்தார்.
தற்போது சூரத்தில் இருக்கும் நகைக்கடை ஒன்று கடந்த ஒரு மாதமாக தங்கம், வெள்ளி, வைரக்கற்கள், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த மாஸ்க்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்தக் கடை உரிமையாளர் தீபக் சோக்ஷி அளித்திருக்கும் பேட்டியில், ''வைரம் பதித்த தங்க மாஸ்க் வேண்டும் என்று ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் கொடுத்தார். அவருக்கு திருமணம் என்பதால் அப்போது அணிவதற்கு என்று கேட்டு இருந்தார். இதுகுறித்து எங்களது தங்க நகை டிசைனருடன் ஆலோசித்தோம். அவரும் மாஸ்க் வாங்கி வந்து அதில் வைரம் பதித்து தயாரித்தார்.
தங்கம் மற்றும் அமெரிக்க வைர கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாஸ்க் ஒன்றின் விலை ரூ. 1.5 லட்சம். ஒய்ட் கோல்டில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்கின் விலை ரூ. 4 லட்சம். மாஸ்க் தயாரிப்பதற்கு என் 95 மாஸ்க் பயன்படுத்துகிறோம். இந்த மாஸ்க்கை தண்ணீரில் நனைத்து அலசிக் கொள்ளலாம். மக்கள் இதை ஒரு முதலீடாக செய்யலாம். பின்னர் மாஸ்க் வேண்டாம் என்கிறபோது, இதை நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்'' என்கிறார்.
காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்
மக்களும் இந்த வைர, தங்க மாஸ்க்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களது திருமணங்களின்போது அணிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.