பாஜக வேட்பாளர் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யும் தல அஜீத்தின் 'தீனா' அண்ணன்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்காக நடிகர் சுரேஷ் கோபி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கேரள சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபியை நிறுத்த கட்சி மேலிடம் விரும்பியது. ஆனால் அவரோ நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் கடந்த 25ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கையோடு அவருக்கு திருவனந்தபுரத்தில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் கொடுத்துள்ளது.
அவரும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். இந்நிலையில் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யுமாறு பாஜக சுரேஷ் கோபியை கேட்டுக் கொண்டது. அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
அவர் 5 நாட்களில் 40 தொகுதிகளில் பாஜகவுக்காக தீயாக பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக அவருக்கு என கட்சி மேலிடம் ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளது. மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரம் செய்ய கேரளா வந்தால் அந்த மேடையில் கோபிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.