மனிதர்களின் வேதனையை குணப்படுத்தும் மாமருந்தே மாவோயிசம்: நடிகர் சுரேஷ்கோபி பரபரப்பு பேச்சு!
திருவனந்தபுரம்: மனிதர்களின் மனவேதனையை குணப்படுத்தும் மாமருந்தாக மாவோயிசம் உள்ளது என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாவோயிஸ்டுகள் ஊடுருவி தளம் அமைத்துள்ள அம்மாநில போலீசாருடன் மோதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற ஓரிரு நாட்களுக்குள் நடிகர் சுரேஷ் கோபி, மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தை அடுத்த முட்டம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற மனித உரிமைகள் தினவிழாவில் பங்கேற்று பேசிய சுரேஷ் கோபி, "மனிதர்களின் மன வேதனையை குணப்படுத்தும் மாமருந்தாக மாவோயிசம் உள்ளது. உண்மையான கம்யூனிசம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
மனித உரிமைக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு தீர்வு காண மாவோயிசத்தின் ஒத்துழையாமை சிறந்த நிவாரணமாகும். அநீதிகளுக்கு எதிராக போராட மாணவர்கள் முன் வரவேண்டும்.
கேரளாவில் ஆதிவாசி நிலங்களை மீட்டெடுக்க அம்மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.