சுரேஷ் பிரபுவை வைத்து சிவசேனாவுக்கு ஆப்பு வைத்த மோடி: யார் அவர்?
டெல்லி: சிவசேனா பரிந்துரைக்காத அதே கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபுவுக்கு மோடி கேபினட் அமைச்சர் பதவி அளித்துள்ளார்.
சிவசேனா பரிந்துரைக்காத சுரேஷ் பிரபுவுக்கு மோடி கேபினட் அமைச்சர் பதவி அளித்து அழகு பார்த்துள்ளார். தாங்கள் பரிந்துரைத்த எம்.பி. அனில் தேசாய்க்கு பதவி வழங்கப்படாததால் பதவியேற்பு விழாவை சிவசேனா புறக்கணித்தது.
இந்நிலையில் இந்து சுரேஷ் பிரபு யார் என்று பார்க்கலாம். ஒருங்கிணைந்த மின், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட சக்தி ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை மோடி சுரேஷுக்கு அளித்திருந்தார். அப்போதே அவர் மோடியின் மனம் கவர்ந்துவிட்டார். பிரிஸ்பேனில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு உதவியாக இருக்க சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொன்கனில் உள்ள ராஜாபூர் லோக்சபா தொகுதியில் இருந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டவர். 2009ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
முன்னதாக வாஜ்பாய் அரசில் 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சுரேஷ் தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ரசாயனத் துறை, மின்சாரம், கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
மின்துறையை மேம்படுத்த சுரேஷ் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன. நதிகள் இணைப்பு திட்டக் குழுவின் தலைவராகவும் சுரேஷ் இருந்துள்ளார். தெற்காசிய நீர் மாநாட்டு தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். மேலும் உலக வங்கி நாடாளுமன்ற நெட்வொர்க் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சுரேஷ்.
முன்னதாக இன்று காலையில் சுரேஷ் பிரபு சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 61 வயதாகும் சுரேஷ் சி.ஏ. படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.