வந்தால் "பாதுகாப்பு" பிரச்சினையாம்... ரெய்னா திருமணத்தில் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தினர்!
டெல்லி: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கோலகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க மணமகளின் சொந்த கிராமத்தினருக்கு அழைப்பிதல் கொடுக்கவில்லை என்பதால் அந்த கிராமத்து மக்கள் வருத்தமடைந்தனராம்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா-பிரியங்கா சவுத்ரி ஆகியோரின் திருமணம் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு மணமகள் பிரியங்காவின் சொந்த கிராமமான பாம்னோலியைச் சேர்ந்த நான்கே நான்கு பேர் மட்டுமே அழைக்கப்பட்டனராம். இதுகுறித்து பாம்னோலி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் தோமர் என்பவர் கூறுகையில், "நாங்கள் அனைவருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். ஆனால் பிரியங்காவின் தந்தை தேஜ்பால் எங்களை அழைக்கவில்லை" என்று சோகமாக கூறினர்.
அதேசமயம் திருமணம் நடைபெற்ற ஏழு நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில், பாதுகாப்பு கருதி கிராம மக்களை அழைக்க முடியாமல் போனதாக பிரியங்காவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோதுதான் ரெய்னாவின் திருமண செய்தி வெளியானது. மணமகள் மீரட் நகருக்கு அருகில் உள்ள பாம்னோலி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். சுரேஷ் ரெய்னாவை தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மணக்கப் போவதால், மணமகள் பிரியங்காவின் சொந்த கிராமத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவர் தங்கள் கிராமத்து மருமகனாக வருவதால் அந்த மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தை அந்த சிறிய கிராமத்தில் பெரிய திரை கட்டி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில்
இந்திய அணியின் கேப்டன் தோனி, மனைவி சாக் ஷி, குழந்தை ஷீவாவுடன் திருமணத்தில் பங்கேற்றார். துணை கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டார். இவர்களைத் தவிர இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுமே சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் பங்கேற்றனர்.
சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் பங்கேற்க இயலாத பிரதமர் மோடி கடிதம் மூலம் திருமண வாழ்த்து தெரிவித்தார்.