போபாலில் மீண்டும் ஒரு "சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா, பாலக்கோடு தாக்குதல்".. மக்கள் வியப்பு
போபால்: பாலக்கோட் விமான தாக்குதல் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலுடன் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் துர்கா பூஜையில் ஒரு அங்கமாக லைவ் காட்சியாக காண்பிக்கப்பட்டது.
தற்போது நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இதையொட்டி வீடுகள்,கோயில்களில் கொலு வைக்கப்படுகிறது. இந்த பண்டிகை வடமாநிலங்களில் துர்கா பூஜை என கொண்டாடப்படுகிறது.
இந்த துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
ராணுவத்தின் அதிரடி
இந்த பூஜையில் இந்திய நாட்டை காக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் ராணுவத்தின் அதிரடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
புல்வாமா தாக்குதல்
கருப்பு உடை அணிந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாலக்கோட் விமான தாக்குதலும் புல்வாமா தீவிரவாத காட்சிகளும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய படைகள்
இது குறித்து விழா ஏற்பாட்டாளர் கூறுகையில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்காக பாகிஸ்தான் விமான தாக்குதலையும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும் இந்திய படைகள் நடத்தின.
|
கண் முன் நிறுத்திய காட்சிகள்
தற்போது துர்கா பூஜையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நமது பாதுகாப்பு படைகளுக்கு மரியாதை செலுத்துவது ஆகும் என தெரிவித்திருந்தார். இந்த காட்சிகள் அசல் சம்பவத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.