பிரணாப் முகர்ஜியின் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா? காங். சுளீர் கேள்வி
பிரணாப் முகர்ஜியின் அறிவுரைகளை பாஜக ஏற்குமா என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவை கடைபிடிக்குமா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கடும் சர்ச்சைகளுக்கு இடையே முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அவர் தமது உரையில், தேசத்தின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக் காட்டிப் பேசினார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பிரணாப் முகர்ஜி பேசினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, பிரணாப் முகர்ஜி தமது உரையில் தேசத்தின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
பொதுவாக தேசத்தின் தற்போதைய நிலவரத்தை பிரணாப் முகர்ஜி அம்பலப்படுத்தியிருக்கிறார். இனியாவது பிரணாப் முகர்ஜியின் அறிவுரைகளை ஏற்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை தங்களது போக்கை மாற்றிக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.