இஸ்ரோவின் புதிய தலைவர் ஷைலேஷ் நாயக்- ராதாகிருஷ்ணனின் ஓய்வைத் தொடர்ந்து நியமனம்
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைவராக ஷைலேஷ் நாயக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக கடந்த 2009 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவிக்காலத்தில் பி.எஸ்.எல்.வி, மங்கள்யான், ஜி.எஸ்.எல்.வி., இன்சாட், ஜிசாட் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பத்தின் பல செயற்கைகோள்களும், ஏவுகணைகளும் இவரின் முயற்சியால் விண்ணில் ஏவப்பட்டன.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை பெற்றுள்ள ராதாகிருஷ்ணன், 2014 ஆம் ஆண்டின் சிறந்த பத்து விஞ்ஞானிகளில் ஒருவராக பிரபல அறிவியல் இதழான நேச்சர் தேர்வு செய்தது.
செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் முதல் முயற்சியிலேயே அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது ராதாகிருஷ்ணனின் திறைமைக்கு கிடைத்த ஒரு வெகுமதியாகும்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் இஸ்ரோவின் உயரதிகாரிகளும், ஏராளமான ஊழியர்களும் பிரியாவிடை அளித்து, அவரை வழியனுப்பி வைத்தனர்.