முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு காரணமாக.. யோகா தின நிகழ்ச்சிகளில் சூரிய நமஸ்காரம் "கட்"!
டெல்லி: சர்வதேச யோகா தினமான ஜூன் 21ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்த யோகா செய்வது மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகியவற்றிலிருந்து தற்போது சூரிய நமஸ்காரத்தை மட்டும் நீக்கியுள்ளது. இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஜூன் 21ம் தேதி நடைபெறும் யோசாகசன நிகழ்ச்சிகளின்போது சூரிய நமஸ்கார ஆசனம் மட்டும் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகாசன தினமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகாசனம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் அன்று யோகாசனம் செய்ய முன்வருமாறு பிரதமர் மோடியும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சூரிய நமஸ்காரம் என்பது இந்துக்களின் பழக்க வழக்கம். மதம் தொடர்பான இதை முஸ்லீம் மாணவர்கள் மீது திணிப்பதற்கு இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. மேலும் யோகாசனம் என்பது இந்துக்களின் பழக்கமாகும். அதை முஸ்லீம்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
மேலும் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியமும், சூரிய நமஸ்காரத்தை திணிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை நீக்கவும் அது கோரியிருந்தது. இதையடுத்து சூரிய நமஸ்காரம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்வதேச யோகா தினத்தன்று ஓம் என்ற மந்திரத்தை முழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. டெல்லி ராஜ்பாத்தில் பிரமாண்டமான முறையில் கிட்டத்தட்ட 40,000 பேர் கூடி யோகாசனம் செய்யவுள்ளனர். பிரதமர் மோடி இதில் கலந்து கொள்கிறார்.