“ஸ்கை”யின் 360 செய்கை! இந்திய டீவில்லியர்ஸின் “ஹாட்ரிக் 50” - யாரு சாமி நீங்க? சரவெடி
கவுஹாத்தி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அரைசதம் விளாசி அனைவரையும் வாய்பிளக்க செய்திருக்கிறார் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை விளாசி அசத்தினார்.
”ஏலியனின் ஜெராக்ஸ்” தென் ஆப்பிரிக்காவை தனி ஒருவனாக அசால்ட் செய்த சூர்யகுமார் யாதவ்!
2வது போட்டி
இந்த நிலையில் நேற்று அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதல் 5 பேட்ஸ்மேன்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக முதல் போட்டியில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் அரைசதம் விளாசி அசத்தினார்.
அதிரடி ஆட்டம்
ரபாடா, வெயின் பார்னெல், நோர்ட்ஜே, இங்கிடி என உலகின் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்ட தென்னாப்பிரிக்காவை தனது பேட்டிங்கால் துவம்சம் செய்து இருக்கிறார். நேற்றைய போட்டியில் 5 பவுண்டரில்கள், 5 சிக்சர்களை அடித்து 22 பந்துகளில் 55 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 277.27.
360 பேட்டிங்
எப்படிப்பட்ட வீரருக்கும் ரபாடா போன்ற உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது சிறிய தடுமாற்றமும் கவனமும் இருக்கும். ஆனால், சூர்யகுமார் யாதவோ பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பவுலர்களுக்கும் சம்பவம் செய்து வருகிறார். பந்து எத்திசையில் வந்தால் அந்த திசையில் பவுண்டரிக்கு திருப்பி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள சூர்யகுமார்.
இந்திய டிவில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்கெட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் இதே பாணியிலான ஆட்டத்தை விளையாடக் கூடியவர். அவர் பேட்டிங் செய்யும்போது எல்லா பக்கமும் பந்துகள் பறக்கும். இதன் காரணமாக அவரை மிஸ்டர் 360 என்று ரசிகர்களும், கிரிக்கெட் உலகினரும் அழைப்பது வழக்கம். தற்போது சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்க்கும்போது ஏபி டிவில்லியர்ஸின் பேட்டிங்கை பார்ப்பதைபோல் உள்ளது. அவரை இந்தியாவின் டிவில்லியர்ஸ் என்று கூட அழைக்கலாம்.
ஹாட்ரிக் 50
நீண்ட நெடிய போராட்டத்துக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார். குறிப்பாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து அபிரிமிதமான ஃபார்மில் எதிரணிகளை பந்தாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 69 ரன்களை விளாசிய இந்தியா, ஹாட்ரிக் அரைசதத்தை விளாசி இருக்கிறார்.