லலித் மோடிக்கு உதவியதாக ஒரு ஆதாரம் இருக்கிறதா? மனைவிக்குதான் 'மனிதாபிமான' உதவி.. சொல்கிறார் சுஷ்மா!!
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விசா பெறுவதற்கு தாம் எப்போதும் உதவவில்லை; புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லலித் மோடி மனைவி போர்ச்சுகலில் சிகிச்சை பெற மனிதாபிமான அடிப்படையில் உதவினேன் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நிதி மோசடியில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரையும் மற்றும் வியாபம் ஊழல் காரணமாக மத்திய பிரதேச முதல்வ சிவராஜ் சவுகானையும் பதவி நீக்கம் செய்தால்தான் சபையை நடத்த விடுவோம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று லோக்சபாவில் அளித்த விளக்கம்:
லலித் மோடிக்கு உதவியதாக என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது எனக்கு மிக மோசமான நாட்கள். இதோடு இந்த பிரச்னை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.
நான் பிரட்டிஷ் அரசை வலியுறுத்தியிருந்தால், பேட்டி ஒன்றில், அவர்களை அதனை கூறியிருப்பார்கள். ஆனால், நான் அதை செய்யவில்லை என்றுதான் அவர்கள் கூறினார்கள். லலித் மோடி விசா பெற நான் எப்போதுமே பரிந்துரைக்கவில்லை. அதற்கான ஒரு குறிப்பு.. ஒரு இ மெயிலை காட்ட முடியுமா?
இந்த சம்பவத்தில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கக் கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
லலித் மோடியின் மனைவிக்கு புற்றுநோய் உள்ளது. அவர் போர்ச்சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒரு பெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன்.
நான் அவருக்கு உதவியது குற்றம் என்றால், அந்த குற்றத்துக்கு எந்த தண்டனையை இந்த சபை அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.