பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.. ஆனா காது மூக்கு வைத்து கதை விடாதீங்க.. சுஷ்மா
டெல்லி: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று புதிதாக சில அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஆனால், இந்த விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவில்லை. ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று காலையில் அந்த விழா நடைபெற்றது. ஆனால், இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவில்லை.
ஆனால், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "ஹங்கேரியில் வெளிநாட்டு அமைச்சரை இன்று சந்திக்க உள்ளதால், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. சக அமைச்சர்கள் குழுவில் சேர்ந்த புதிய அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கூடவே, விழாவில் தான் பங்கேற்காததை ஊடகங்கள் கண், காது, மூக்கு வைத்து பெரிதாக்க வேண்டாம் எனும் அர்த்தத்தில், 'ஊடகங்களே, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை சுஷ்மா புறக்கணித்தார் என தலைப்பு செய்தி கொடுத்து விடாதீர்கள்' என மற்றொரு டிவிட்டில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.