39 இந்தியர்கள் இறந்து விட்டதாக ஆதாரமில்லாமல் கூற முடியாது- சுஷ்மா ஸ்வராஜ்
ஈராக்கில் மாயமான 39 இந்தியர்களின் நிலை என்னவென்பதை அறிந்து சொல்ல வேண்டியது அரசின் கடமை என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
டெல்லி: ஆதாரமில்லாமல் எவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிப்பது பாவம். அந்த பாவத்தை என்னால் செய்ய முடியாது என்று லோக்சபாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
39 இந்தியர்களின் நிலை என்னவென்பதை அறிந்து சொல்ல வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் 39 இந்தியர்கள் மாயமானது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சுஷ்மா ஸ்வராஜ் எழுந்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
39 இந்தியர்கள் மாயம்
ஈராக்கின் மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றியபோது, அங்கு கூலித் தொழிலாளிகளாக வேலை செய்துவந்த 39 இந்தியர்கள் மாயமானார்கள். அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கூறப்பட்டது.
என்ன ஆனார்கள்
மொசூல் நகரில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மொசூல் நகரம் முழுவதும் ஈராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது.
உறவினர்கள் கவலை
மாயமான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தீவிரப்படுத்தினார். இதற்கிடையில் மாயமான இந்தியர்களை மீட்டுத்தரும்படி அவர்களின் உறவினர்கள் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து முறையிட்டனர்.
ஈராக்கிடம் கோரிக்கை
இந்நிலையில், ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஷேய்க் அல் ஜாப்ரி, 5 நாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். அப்போது மாயமான இந்தியர்களை மீட்க உதவும்படி சுஷ்மா வலியுறுத்தினார்.
லோக்சபாவில் அறிக்கை
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா லோக்சபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். விவசாயிகள் பிரச்சனை மற்றும் பசுப்பாதுகாப்பு கூட்டத்தின் வன்முறை பற்றி கார்கே குறிப்பிட்டார். கார்கேவின் பேச்சு அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
சுஷ்மா உருக்கம்
அமளிக்கு பிறகு பேசிய சுஷ்மா, ஆதாரமில்லாமல் எவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிப்பது பாவம். அந்த பாவத்தை என்னால் செய்ய முடியாது. இந்தியர்களின் நிலை என்னவென்பதை அறிந்து சொல்ல வேண்டியது அரசின் கடமை.
ஆதாரம் இல்லை
இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆதாரமாக உடல்களோ, ரத்த கரைகளோ, உயிரிழந்தவர்களின் பட்டியலோ, ஐஎஸ் வீடியோவோ ஏதும் இல்லை. அதனால் தான் அவர்கள் உயிரிழந்திருப்பார் என்பதற்கு பதிலாக மாயமாகி உள்ளதாகவே நான் நம்புகிறோம். வெளிநாட்டு அரசுகளுடன் நானும், பிரதமரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்.
தேடி வருகிறோம்
யூகத்தின் அடிப்படையில் தவறான தகவலை தர விரும்பவில்லை. கடத்தப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து தொடர்ந்து தேடி வருகிறோம் என்று லோக்சபாவில் சுஷ்மா தெரிவித்தார்.