திடீர் நெஞ்சுவலி.. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு செயலரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
முதலில் நுரையீரல் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு நெஞ்சக பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தாமதமாகவே வெளியுலகத்திற்கு தெரியவந்தது.