“வெளிநாட்டின் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களே நாடு திரும்புங்கள்” - சுஷ்மா சுவராஜ் கோரிக்கை
டெல்லி: வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் வேலையை முன்னிட்டு வசித்து வருகின்ற இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.
ஏமனில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கி தாங்கிய தீவிரவாதிகள் கண்மூடி தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தில் நான்கு இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் ஆபத்தான பகுதிகளில் வாழும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்பி வருவாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசின் ஆலோசனைகளை புறக்கணித்துவிட்டு நர்ஸ்கள் ஏமனில் தங்கி இருந்ததாக அவர் கூறினார். இந்த தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் சுஷ்மா சுவராஜ் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "ஏமன் நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 4 இந்திய நர்ஸ்கள் கொல்லப்பட்டனர். நான் மிகவும் வருகிறேன். நர்ஸ்கள் அரசாங்கத்தின் ஆலோசனைகளை புறக்கணித்து அங்கேயே தங்கி இருந்தனர். அதுதான் அவர்களைக் காப்பாற்ற இயலாமல் போனதற்கு காரணம். ஆபத்தான வெளிநாட்டு பகுதிகளில் தங்கி இருக்கின்ற இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.