பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமெரிக்கா பயணம்!
டெல்லி: நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. சபை ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்த போது 2002 ஆம் ஆண்டு மத கலவரங்களைக் காரணம் காட்டி அவருக்கு அமெரிக்கா விசா தர மறுத்தது. பின்னர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே அமெரிக்கா மோடியுடன் நட்பு பாராட்டி வருகிறது.
தற்போது ஐ.நா. ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக 5 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஐ.நா.வில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஒபாமாவையும் சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்காவில் சுஷ்மா
இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை ஏற்பாடு செய்வதற்காக 10 நாள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக ஐ.நா தலைமையகத்தில் நேற்று இங்கிலாந்து, சூடான், மாலத்தீவு, நார்வே, கிர்கிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சுஷ்மா சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி தலைமையிலான குழுவுடன் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இணைந்து கொள்கிறார்.