குல்பூஷன் விவகாரத்தில் பாக். மனிதாபிமானத்துடன் நடக்கவில்லை.. சுஷ்மா ராஜ்யசபாவில் அறிக்கை
ராஜ்யசபாவில் குல்பூஷன் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார்.
டெல்லி: ராஜ்யசபாவில் குல்பூஷன் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார். பாகிஸ்தானில் குல்பூஷன் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருப்பதாகவும் சுஷ்மா தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவரது மரண தண்டனை சர்வதேச நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் குல்பூஷன் அவரது மனைவி மற்றும் தாயை சந்தித்தார். குல்பூஷன் ஜாதவை பார்க்க சென்ற அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சந்திப்பிற்கு பின் குல்பூஷன் மனைவி மற்றும் தாய், சுஷ்மாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். தற்போது குல்பூஷன் அவரது குடும்பத்தை சந்தித்தது குறித்து சுஷ்மா ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் ''குல்பூஷன் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மனிதாபிமானத்துடன் நடக்கவில்லை. அவரது மனைவி அணிந்து இருந்த தாலியை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கழட்ட சொல்லி இருக்கின்றனர். குல்பூஷன் மனைவி விதவையைப் போல் நடத்தப்பட்டு இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார். அவரது அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்டு இருக்கிறது'' என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.