உடல் நலத்தில் ஒளித்து வைக்க ஒன்றுமில்லை.. ஜெ.வுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுத்த சுஷ்மா சுவராஜ்
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது உடல் பிரச்சினை குறித்து வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளார்.
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது உடல் பிரச்சினை குறித்து வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளார்.
இதற்கு முன்பு எந்த ஒரு முக்கியஸ்தர்களும் தைரியமாக இதுபோல ஒரு வெளிப்படைத்தன்மையோடு இருந்ததில்லை. ஜெயலலிதா உட்பட.
ஜெயலலிதா உடல் நலம் குறித்து ரகசியம் காக்கப்பட்டு வந்ததால், அரசியல்வாதிகளின் உடல் நலம் குறித்து மக்கள் அறிய வேண்டுமா, அல்லது அவர்கள் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமா என்ற வாத, விவாதங்கள் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், சுஷ்மா அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
"நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி ஃபெய்லியர் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் நடந்து வருகின்றன. கிருஷ்ண பகவான் துணையிருப்பார்" என சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுஷ்மா போல இப்படி யாரும் வெளிப்படையாக அவர்களின் உடல் நலன் பிரச்சினையை வெளிப்படுத்தியதில்லை. தொண்டர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என்பதற்காக சில தலைவர்களும், தங்களுக்கு பிறகான அதிகார போட்டி வெடித்துவிடக் கூடாது என்பதற்காக சில தலைவர்களும் உடல் நல பிரச்சினையை மறைத்து வந்துள்ளனர்.
சில தலைவர்கள் தங்களை கடவுள் ரேஞ்சுக்கு மக்களிடம் போலியான பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். "கடவுளுக்கு ஒன்றுமே ஆகாது" என்ற மனநிலையோடுதான் அக்கட்சி தொண்டர்கள் மூர்க்கத்தனமாக இருப்பார்கள். அதுபோன்ற தலைவர்களும், தங்களது இமேஜ் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ரகசியம் காப்பார்கள். ஏனெனில் அந்த கடவுள் இமேஜ்தான் அவர்களுக்கு வாக்குகளாக அறுவடையாகும். அந்த இமேஜ் போய்விட்டால் அவர்கள் செல்லாக்காசாகிவிடுவார்கள் என்ற பயம் உண்டு.
இப்படி பல்வேறு காரணங்களால் அரசியல் தலைவர்களில் பலரும் தங்களது உடல் நிலையை வெளியே சொல்வதில்லை. இதில் சுஷ்மா சுவராஜ் புது பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். இனி வரும் காலங்களில் மேலை நாடுகளை போல இந்திய அரசியல்வாதிகளும் தங்களது உடல் நலனை வெளிப்படையாக அறிவிக்க சுஷ்மாவின் இந்த ஒரு டிவிட் பெரும் தூண்டுகோலாக அமைய வாய்ப்புள்ளது.