லலித் மோடி விவகாரம்.. நாடகக் கலையில் கைதேர்ந்தவரப்பா சுஷ்மா...: சோனியா 'பொளேர்' தாக்கு
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றாக நாடகமாடுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் தொடர்ந்தும் எரிமலையாக வெடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலில் மனிதாபிமான அடிப்படையில் தாம் உதவியதாக சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடிக்கு உதவவே இல்லை; அவரது மனைவிக்குத்தான் மனிதாபிமான அடிப்படையில் உதவினேன்.. என்னுடைய இடத்தில் இருந்திருந்தால் சோனியாவும் அப்படித்தான் செய்திருப்பார் என்று கூறி அந்தர்பல்டி அடித்தார். இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.
25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் நாடகக் கலையில் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பதைத்தான் அவரது நாடாளுமன்ற விளக்கம் வெளிப்படுத்துகிறது; நான் சுஷ்மாவின் இடத்தில் இருந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் சட்டத்தை மீறாமல் உதவியிருப்பேன் என்று சாடினார்.
மேலும், லலித் மோடி சிறைக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காக அவரைப் பாதுகாப்பதற்காக பெருந்தொகையான பணத்தை சுஷ்மா ஸ்வராஜ் குடும்பம் வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும் திருடன் திருடினான் என்று கூறும் போதே அங்கு திருட்டுத்தனம் இருக்கிறது. சுஷ்மா என்ன திருட்டுத்தனம் செய்தார்? அந்த அமைச்சகத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை என்றும் சீறினார் ராகுல்.