சித்தி கொடுமை-இந்தியாவுக்கு தப்பி வந்த ‘ரம்ஜான்’ தாயுடன் சேர்த்து வைக்கப்படுவான்: சுஷ்மா
டெல்லி: சித்தி கொடுமை தாங்காமல் இந்தியாவிற்கு தப்பி வந்த பாகிஸ்தான் சிறுவன் ரம்ஜானை, மீண்டும் தாயுடன் சேர்த்து வைக்க மத்திய அரசு தயார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் சென்றடைந்த வாய்பேச முடியாத, காதுகேளாத இந்திய பெண் கீதா, சமீபத்தில் மீண்டும் நாடு திரும்பினார். எல்லைப் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபகாலமாக அதிகரித்துவரும் பதற்றத்தைத் தாண்டி, மிகவும் நெகிழ்ச்சியாக இந்த சம்பவம் நடந்தது.
கீதா இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த சிறுவன் ரம்ஜானை மீண்டும் அவனது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவது குறித்த பேச்சு எழுந்தது.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த முகமது கசோல், பேகம் ரசியா தம்பதியின் மகன் ரம்ஜான் (15). கருத்து வேற்றுமையால் அந்த தம்பதி கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் ரம்ஜானை அழைத்துக் கொண்டு வங்கதேசத்தில் குடியேறிய முகம்மது கசோல் அங்கு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், தனது சித்தியின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ரம்ஜான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு தப்பி வந்தான். ராஞ்சி, டெல்லி என சுற்றித்திரிந்த அவன் தற்போது மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறான்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அந்த சிறுவனை நேரில் சந்தித்தார். அப்போது அச்சிறுவன் தனது தாயை காண பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சுஷ்மா சுவராஜ், ‘ரம்ஜான் பாகிஸ்தான் செல்ல விரும்பினால் அவனை அவன் தாயுடன் சேர்த்துவைக்கும் நடவடிக்கைகளில் இறங்க இந்திய அரசு தயாராக உள்ளது. விரைவில் இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அதற்கான பணிகளை மேற்கொள்வர்' என்றார்.
எனவே, விரைவில் ரம்ஜான் மீண்டும் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.