டெல்லியில் பாலஸ்தீன அதிபரின் சிறப்புத் தூதர் - சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு
டெல்லி: இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் நாட்டு அதிபரின் சிறப்புத் தூதர், நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.
பாலஸ்தீன அதிபர் தனது சிறப்புத் தூதராக டாக்டர் நபில் ஷாத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். நேற்று டெல்லி வந்த நபில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்தார்.
கடந்த ஜூலை மாதம், இஸ்ரேல், பாலஸ்தீனம் நடத்தி வந்த தீவிரத் தாக்குதலின் பின்னணியில், பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லைஎன்று கூறியிருந்தார். அதேசமயம், இந்திய அரசோ, இஸ்ரேல் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்தது. காஸா முனையில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவாதிக்க முன்வராதது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், காஸாவில் இஸ்ரேல் நடத்திய போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
மோடி அரசு வந்தது முதலே இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களும் ஏற்பட்டு வருகின்றன.
ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில்தான் பாலஸ்தீன அதிபரின் சிறப்புத் தூதர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.