வெளியுறவுத்துறை அமைச்சர்.. வேலையை ஆரம்பித்தார் சுஷ்மா சுவராஜ்!
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையுடன் தனது பணியைத் தொடங்கியுள்ளார் சுஷ்மா சுவராஜ்.
உண்மையில் இவர் அமைச்சராகப் பதவியேற்றதுமே இவரது வேலை தொடங்கி விட்டது. அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அடுத்த நாள் பிரதமர் மோடியைச் சந்தித்த பல்வேறு சார்க் நாடுகளின் தலைவர்களுடன் இவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற வகையில், மோடியுடன் காணப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கையின் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் மோடியைச் சந்தித்தபோது இவரும் உடன் இருந்தார்.
62 வயதாகும் சுஷ்மா, மோடி அமைச்சரவையில் நம்பர் 3 அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு சிறப்புகளுக்கும் சுஷ்மா சொந்தக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதிலேயே
தனது 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம் பெற்று சாதனை படைத்தவர் சுஷ்மா. மிகவும் இளம் வயதில் அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்மணியும் சுஷ்மாதான்.
டெல்லியின் முதல் பெண் முதல்வர்
மேலும் டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் சுஷ்மாவுக்கு உண்டு.
வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை
வெளியுறவுத்துறையுடன், வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையும் சுஷ்மாவிடம் கூடுதலாக தரப்பட்டுள்ளது.
முக்கியப் பிரச்சினைகள்
பாகிஸ்தானுடன் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, சீனாவுடன் உரசல், அமெரிக்கா உள்பட பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கும் சூழலில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்- சீனாவை வழிக்குக் கொண்டு வர இயலுமா...
எடுத்த எடுப்பிலேயே பாகிஸ்தானுக்கு சமாதானக் கொடியை காட்டியுள்ளார் மோடி. அதேபோல சீனாவிடமும் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. எனவே சுஷ்மாவுக்கு நிறைய வேலைகள் காத்துள்ளன.
பெண் செயலாளர்
வெளியுறவுத்துறையில் பெண் அமைச்சர் இருப்பது போல வெ்ளியுறவுத்துறைச் செயலாளராகவும் சுஜாதா சிங் என்ற பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் படித்த சுஷ்மா
சுஷ்மா சுவராஜ் சட்டம் படித்தவர். சுப்ரீ்ம் கோர்ட்டில் பணியாற்றியவர். 7 முறை எம்.பியாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஏபிவிபியில் இணைந்து
மாணவியாக இருந்தபோதே ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து கட்சிக்கு வந்தவர் சுஷ்மா.
வாஜ்பாய் அமைச்சரவையில்
13 நாள் மட்டுமே பதவியில் இருந்த முதலாவது வாஜ்பாய் அமைச்சரையில் 1996ம் ஆண்டு செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா.
டெல்லி முதல்வராக 1998ல்
பின்னர் 1998ம் ஆண்டு அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி, டெல்லி முதல்வராகப் பதவியேற்றார். தற்போது மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார். இவர் தீவிர அத்வானி ஆதரவாளர்.