10 நாள் கழித்து... தமிழக மீனவர் பிரச்சனை பற்றி முதன் முறையாக வாய் திறந்தார் சுஷ்மா
தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி முதன் முறையாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாய் திறந்துள்ளார்.
டெல்லி: மீனவர்கள் மீது ஆயுதம் பிரயோகிக்க இலங்கை கடற்படைக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக மீனவர்கள் குறித்து முதன் முறையாக சுஷ்மா சுவராஜ் வாய் மலர்ந்தருளியுள்ளார்.
கடந்த 6ம் தேதி கடலில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற சரோன் என்பவர் படுகாயம் அடைந்து படுக்கையில் கிடக்கிறார். ஒரு வாராமாக பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்யாமல் மீனவ மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போதெல்லாம் எங்கே இருந்தார் வெளிவிவகாரத் துறை அமைச்சர் என்றே தெரியவில்லை. பிரதமர் மோடியாவது வெளியூர் பயணம் மேற்கொள்பவருக்கு மீனவர் சுட்டுக்கொலை சின்னவிஷயம் என்று பாஜகவினர் சொல்லிவிடலாம். ஆனால் இந்தியாவிலே இருந்த சுஷ்மா சுவராஜ் வாயே திறக்கவில்லை. இதுவே வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு பிரச்சனை என்றால் உடனே டுவிட்டி விடுவார். அழுவார். புலம்புவார். ஆனால் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வாயே திறக்காமல் இருந்தார்.
முதன் முதலாய் திருவாய்…
இந்நிலையில், என்ன ஆனதோ தெரியவில்லை அதிசயமாக தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து, இலங்கை அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
மீனவர் குறித்த அறிக்கை
இதுகுறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று ஒரு அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார். எந்த சூழ்நிலையிலும் இந்திய மீனவர்கள் மீது ஆயுதத்தை பிரயோகிக்க, இலங்கை கடற்படைக்கு அதிகாரம் இல்லை என்பதை, இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்றும் இந்த விவகாரத்தில், நம்முடைய முழு அதிருப்தியையும், கண்டனத்தையும், கவலையையும், இலங்கைக்கு தெரிவித்திருப்பதாகவும் சுஷ்மா கூறினார்.
நிரந்தரத் தீர்வு
இது தொடர்பாக, இலங்கை அரசுடன், பிரதமர் மோடியும், நானும் பேசியுள்ளோம். சமீபத்தில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்தபோது, இந்தியாவின் கவலையை, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார் என்ற கூறிய அமைச்சர், தமிழக மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது என்றும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மீனவர் விடுவிப்பிற்கு முன்னுரிமை
மேலும், இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்று கூறிய சுஷ்மா, மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்தும், இலங்கை அரசுடன் பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார்.