பாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவேன்- பரபர சுஷ்மா
டெல்லி: நிலக்கரி ஊழலில் சிக்கி குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள தனது தலைவர் ஒருவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கடுமையாக நெருக்கி வந்தார் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அந்தத் தலைவரை தான் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவிட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அயோக்கியன்னா நீ மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அளவில்தான் அரசியல்வாதிகள் உள்ளனர்.
தன்னைப் பார்த்து ராஜினாமா செய்யக் கோரும் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் சுஷ்மா. இது நாள் வரை அதுகுறித்து வாயே திறக்காமல் இருந்து வந்த அவர் திடீரென அந்த அஸ்திரத்தை எடுத்து வீசியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்விட்டைப் போட்டுள்ளார். அதில், ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் நிலக்கரி ஊழல் குற்றவாளி சந்தோஷ் பொக்ராடியாவுக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்குமாறு என்னை தீவிரமாக வலியுறுத்தி வந்தார் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
அவர் யார், பெயர் என்ன என்று ஒருவர் சுஷ்மாவிடம் பதில் டிவிட்டில் கேட்க, அதற்கு நான் அவரது பெயரை நாடாளுமன்றத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா. இதனால் பரபரப்பு கூடியுள்ளது.
சந்தோஷ் பொக்ராடியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2008 முதல் 2009 வரை நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர். மகாராஷ்டிராவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக நிலக்கரி ஒதுக்கீடு செய்த வழக்கில் இவரும் ஒரு குற்றவாளியாக உள்ளார். இவருக்கு நேற்றுதான் சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
A senior Congress leader was pressing me hard to give diplomatic passport to the Coal Scam accused Santosh Bagrodia.@ANI_news
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 22, 2015
லலித் மோடிக்கு சலுகை காட்டியது தொடர்பாக சுஷ்மாவைக் குறி வைத்து வருகிறது காங்கிரஸ். இந்த நிலையில் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் நாடாளுமன்றக் கூட்டில் அமளி துமளிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
I will disclose name of the leader on the floor of the House.@imTejasBarot
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 22, 2015
சுஷ்மாவை மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது காங்கிரஸ். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த விட மாட்டோம் என்றும் காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி விட்டது என்பது நினைவிருக்கலாம்.