மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
டெல்லி: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டார்.
உறவினர்களின் சிறுநீரகங்கள் அவருக்கு பொருந்தாத நிலையில், வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை அறிந்த ஏராளமானோர் தங்களின் சிறுநீரகத்தை அமைச்சர் சுஷ்மாவுக்கு தானமாக கொடுக்க முன் வந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டார் சுஷ்மா.
அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்று நடைபெற்றது.நேற்று காலை 8.30 மணி அளவில் தொடங்கிய சிறுநீரக மாற்று சிகிச்சையானது மதியம் 2.30 மணி அளவில் முடிவடைந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எம்.சி.மிஸ்ரா மற்றும் துணை டீன் வி.கே.பன்சல் ஆகிய இருவர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவானது இந்த சிகிச்சையை மேற்கொண்டது.
அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டதாக நேற்று பிற்பகல் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.