சுஷ்மா ஸ்வராஜ் பிப்ரவரி 5-ல் இலங்கை பயணம்... தமிழர் தலைவர்களையும் சந்திக்கிறார்!!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிப்ரவரி 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தில் அண்மையில் மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தாம் விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 5-ந் தேதி சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். மேலும் இந்தியா- இலங்கை கூட்டு குழு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
பிப்ரவரி 6-ந் தேதி தமிழரின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின் போது தமிழக மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர் விவகாரங்கள் குறித்து சுஷ்மா ஆலோசனை நடத்த உள்ளார்.