தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு!
இந்தூர்: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் தான், போட்டியிடப்போவது இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமது முடிவை கட்சி மேலிடத்தில் தெரிவித்து விட்டதாகவும், தனது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
66 வயதாகும், சுஷ்மாவிற்கு கிட்னி பிரச்சினை இருந்து வந்தது. எனவே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சமீப காலமாக நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக செல்லாமல் இருந்து வருகிறார். இவர் ம.பி மாநிலத்தின், விதிஷா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக சுஷ்மா செல்வதில்லை என்பதை விமர்சனம் செய்து விதிஷா தொகுதியில் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதுதொடர்பான நிருபர்கள் கேள்விக்குதான், சுஷ்மா இந்த தகவலை தெரிவித்தார்.