ஒடிசாவில் ஈராக் நாட்டினர் 4 பேர் தலைமறைவு: தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் !
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஈராக் நாட்டினர் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ஆர்யா மஹால் என்ற ஹோட்டலுக்கு நேற்று இரவு காரில் வந்த 4 பேர், நாங்கள் ஈராக்கை சேர்ந்தவர்கள் எனவும் தங்குவதற்கு அறை வேண்டும் எனவும் ஹோட்டல் மேலாளரிடம் கேட்டுள்ளனர்.
அடையாள அட்டை தருமாறு மேலாளர் கேட்கவும் நான்கு பேரு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஹோட்டல் மேலாளர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.
4 பேரும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாகவும் ஹோட்டல் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அறை கேட்டு வந்தவரின் உருவம் மற்றும் அவர்களது கார் ஆகியவை ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றி கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த எண் போலி என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. அருண் போத்ரா தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.ஏற்கனவே நாடு முழுவதும், ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஸிலிப்பர்ஸ் கைது செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றன.