கையில் விலங்குகள் மாட்டப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் எப்படி தப்ப முடியும்? கொந்தளிக்கும் தெலுங்கானா
நலகொண்டா: தெலுங்கானா போலீசாரால் 5 தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சிமி இயக்கத்தினர் 3 போலீசாரை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த என்கவுண்ட்டர் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் சிறையில் இருந்த 5 தீவிரவாதிகள், ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது நடுவழியில் 5 தீவிரவாதிகளும் தப்பி ஓட முயன்றதாகவும் அதனால் அனைவரையும் சுட்டுக் கொன்றதாகவும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 5 தீவிரவாதிகளும் போலீஸ் வேனிலேயே கைவிலங்குகள் மாட்டப்பட்ட நிலையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். போலீசார் வெளியிட்ட படங்களும் இதனையே உறுதி செய்துள்ளன.
மேலும் தீவிரவாதிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்திருந்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு போலீசார் கூட காயமடையவில்லை. தற்போது இந்த சம்பவத்துக்கு தீவிரவாதிகளின் குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போலி என்கவுண்ட்டர் சம்பவத்துக்கு தெலுங்கானா மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், 3 போலீசாரை சிமி இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு பழிவாங்கும் வகையில்தான் 5 பேரையும் போலீசார் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்" என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கடந்த வாரம் சிமி இயக்கத்தினரால் 3 போலீசார் கொல்லப்பட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பழிவாங்கவே 5 பேரையும் போலீசார் சுட்டுக் கொலை செய்திருப்பதாக ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா போலீசார் 20 தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த சர்ச்சை வெடித்துள்ளது. தற்போது தெலுங்கானா போலீசாரும் 5 தீவிரவாதிகள் படுகொலை விவகாரத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.