அவ்ளோதான், குளோஸ்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு கவிழ்ந்துவிடும். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு 2021 இல் சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் நிலையில் சுவேந்து அதிகாரி கூறியுள்ளது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சுவேந்து அதிகாரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சில மாதங்கள் பொறுத்திருங்கள். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும். என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ச்சியில் மம்தா.. புறக்கணித்த திரிணாமூல்! மீறிய எம்பிக்கள் - துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வரும் டிசம்பர் மாதத்திற்கு மேல் ஆட்சியில் இருக்காது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் மேற்கு வங்க சட்டசபைக்கும் சேர்த்தே தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தது போல் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலஙகளில் ஏற்படும்.
மகாராஷ்டிரா
இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். மகாராஷ்டிராவில் சிவசேனாவிலிருந்து 3 இல் 2 பங்கு எம்எல்ஏக்கள் வெளியேறிவிட்டார்கள். இதையடுத்து பாஜகவுடன் இணைந்து சிவசேனாவின் இன்னொரு அணி ஆட்சி அமைத்து வருகிறது. 294 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சி 215 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது.
பாஜக
பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்களும் உள்ளன. தேர்தல் முடிந்தவுடன் முதலில் 77 ஆக இருந்த பாஜகவின் பலம் தற்போது 6 பேர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து விட்டதால் பலம் 71 ஆக குறைந்துவிட்டது. 2021 சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அருதி பெரும்பான்மையுடன் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
பாஜக தோல்வி
அப்போது முதல் பாஜகவுக்கு மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் , லோக்சபா இடைத்தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் தோல்வியே தழுவியுள்ளது. அண்மையில் திரிணமூல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றம் அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜியின் அலுவலகத்திலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது, அன்று முதல் மம்தா பானர்ஜிக்கு எதிராக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுவேந்து அதிகாரி யார்
சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியில் இருந்தவர். மம்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் 2020ஆம் ஆண்டு திரிணமூல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு 1956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.