மம்தாவுக்கு அமித்ஷா வைத்த பர்ஸ்ட் செக்.. திரிணாமுல் காங்கிரசில் இருந்து... சுவேந்து அதிகாரி விலகல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிக்க நபராக சுவேந்து அதிகாரி அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் அடுத்த வாரம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுவேந்து அதிகாரி விலகி உள்ளது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த சுவேந்து அதிகாரி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியிலும், மேற்கு வங்கத்திலும் செல்வாக்கு உள்ள நபராக விளங்கிய அவர் முதல்வர் மம்தா பானர்ஜி மீதும், கட்சி மீதும் கடும் அதிருப்தி அடைந்தார்.
அவரை கட்சியில் தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வந்தனர். பாஜகவில் அவரை இழுக்க அந்த கட்சியை சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த நிலையில் சுவேந்து அதிகாரி நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் கட்சியில் இருந்தும் விலகுவார் என தகவல்கள் கூறின.
அதன்படி சுவேந்து அதிகாரி இன்று த் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். அடுத்த வாரம் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்கம் செல்கிறார். அவர் முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு 50 தொகுதிகளில் மக்களிடத்தில் செல்வாக்கு உள்ள சுவேந்து அதிகாரி விலகல் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் அங்கு ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வரும் பாஜகவுக்கு இது மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.