தமிழ் பக்தர்கள் அதிகம்... திருப்பதி பக்தி சேனலை தமிழில் ஒளிபரப்ப வேண்டும்: தேவஸ்தானம் கோரிக்கை
திருப்பதி: திருப்பதி கோவில் டிவி சேனலை தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் எஸ்.வி.பி.சி. என்ற பெயரில் திருப்பதி கோவில் பக்தி சேனலை தெலுங்கில் ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள வெங்கையா நாயுடுவை, திருப்பதி கோவில் முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, எஸ்.வி.பி.சி. பக்தி சேனலை தமிழில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சாம்பசிவராவ், "திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தி டி.வி. சேனல் தெலுங்கில் ஒளிபரப்பப்படுகிறது. இதை தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று நீண்ட காலம் கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருந்துதான் திருப்பதி கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகிறார்கள்.
திருப்பதி பக்தி டி.வி. சேனலை தமிழில் ஒளிபரப்பினால் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றி அவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்" என்றார்.
இதற்கிடையே, மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், "மராட்டிய மாநிலத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட இரு மாநில அரசுகள் பேச்சு நடத்தி வருகின்றன. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்" எனத் தெரிவித்தார்.